பல்லவி :
சொல்லாமல் தூங்கியதென்ன..?பேசாமல் போனது(ம்) என்ன..?
வாழாமல் வீழ்ந்தது(ம்) என்ன..?
மலரே நீ உதிர்ந்ததுமென்ன..?
மகளே சின்ன மகளே, மகளே செல்ல மகளே!
காலத்தை சொல்லவா? - அந்த
காலனைச் சொல்லவா - வந்த
கலக்கத்தைச் சொல்லவா - நீ கொண்ட
தனிமையைச் சொல்லவா?
மகளே சின்ன மகளே, மகளே செல்ல மகளே!
சரணம் 1:
தாய்தந்தை அங்கே கலங்கி நிற்க,தோழமை இங்கே தவித்து நிற்க,
நீ மட்டும் பிரிந்தாயே, செல்ல மகளே!
உன் சிரிப்பாலே, நிறைந்த உள்ளம்,
உன்சொல்லினாலே மகிழ்ந்த இதயம்,
ஒன்றல்ல ஏராளம், சின்ன மகளே!
கவிதை வரிகளில்; மனதைத் திருடிய;
மங்கையடி நீயே, கண்ணம்மா...
சிவந்த கனல் கொண்ட; சிதையின் நாவினில்;
உறங்கச் சென்றதேனோ?
மகளே சின்ன மகளே, மகளே செல்ல மகளே!
சரணம் 2:
துள்ளித்திரிந்த நாளில் தொடங்கி;கல்வியின்மேல் உன் கனவை வளர்த்து;
அதிலும் வென்றாயே, செல்ல மகளே!
ஏதும் இல்லா நிலையை நினைத்து;
இழந்த உறவை மனதில் பதித்து;
தனிமை கொண்டாயே, சின்ன மகளே!
கறுப்பு நிறத்திலும்; இருட்டு யுகத்திலும்;
குழம்பித் தவித்தாயே, கண்ணம்மா...
ஒளியின் திசையினை; விலக்கி ஒதுக்கியே;
தனித்துச் சென்றதேனோ?
மகளே சின்ன மகளே, மகளே செல்ல மகளே!
வரிகளின் மூலம்:
வேண்டப்பட்டவர்களால் ஒதுக்கப்பட்டு, தனிமையை மிகவும் விரும்பிய எனக்குத்தெரிந்த ஓர் இளம்பெண், விளக்கமுடியாத திடீர் நோயினால் இறந்த பொழுதில் உருவானது!