தோழி,
நீ எனக்கு தோழியாவதற்கு,முன்னொரு காலத்தில்,
உனைக்கண்டேன்...
உன் நட்பு வட்டாரத்தைக்கண்டு துனுக்குற்றேன்!
உன் காலடியில் விழுந்து, தம் கால நேரத்தை
இழந்தோரைக் கண்டு, வருந்தினேன்!
அப்படியும் உனை நாடி,
உன் உதவியோடு பிணைத்துக்கொண்ட,
உன் நட்பு வட்டாரத்தைக்கண்டு பரிதாபப்பட்டேன்!
உன் நட்பில் சிக்காமல் சிலபல ஆண்டுகள்;
நானும் தப்பித்துதான் வந்தேன்!
அந்த ஒரு பொழுதில்;
நீ என்னில் வந்த தருணத்தில்,
உனைக்கையில் வருடிய,
உச்சிவெயில் வேளையில்,
ஆம், அந்த ஒருபொழுதில்,
விழுந்தேன், உன் வலையில்...!
உன் அழகும், திறமைகளும் கண்டு சிலிர்த்தேன்;
தோழி, உன் கட்டுக்குள்
என்னையும் அணைத்துக்கொள்ளென,
உள்ளுக்குள் பல முறை அரற்றினேன்!
முடிவில், அணைக்கப்பட்டேன்,
உன் கடைக்கண் பார்வையில் நுழைந்த
என் அரற்றல் அபிநயங்களை, நானே மெச்சிக்கொண்டேன்...
காலங்கள் கடந்தன;
உன்னால், என்னோடு பேசுவதற்கே
சிரமப்பட்டவர்கள் எல்லாம் மகிழ்ச்சி கொண்டனர்!
சந்தேகமேயில்லை, நானும் கூடத்தான்!!
மேலும் பலமுறை,
சூரியனும் சந்திரனும் எழுந்து வீழ்ந்தனர்;
அந்தோ! வெகு தாமதம்!
இப்பொழுதுதான் உணர்கிறேன்,
என் வாழ்வை, நான் வாழ்ந்து
திளைத்திருக்க வேண்டிய தருணங்கள் எல்லாம்,
என் கையில் உன்னை அணைத்ததால்
கானல் நீராய் காணாமல் போனதுவேவென...
இப்பொழுதுதான் உணர்கிறேன்!
ஒரு வழியாய் முடிவெடுத்து விட்டேன்!
நிச்சயமாய், உலகில் பல கோழைகள்
எடுக்கும் முடிவுகள் எதற்கும்,
நான் தயாரில்லை!
பல கட்டுப்பாடில்லாத அலைமனங்களுக்காக,
உன்னை அழிப்பதற்கு எனக்கு இயலவில்லை.
மேலும், உனக்காக எதற்கு என்னையே நான் இழக்க வேண்டும்?
ஒரு வழியாய் முடிவெடுத்து விட்டேன்!
நிச்சயமாய், உன் நிலை பற்றி எனக்கு கவலை இல்லை.
உன்னைக் கை கழுவிவிட வேண்டியதுதான்!
உனக்குத்தான், உன் காலடியில் தம்மையே சமர்பித்த
இன்னும் பலர் இருக்கின்றனரே!
ஒரு வழியாய் முடிவெடுத்து விட்டேன்!
நிச்சயமாய், உன்னை தூக்கி எறிந்துவிடவேண்டியதுதான் என
முடிவெடுத்து விட்டேன்!
என் அருமை செல்பேசியே, என் கைப்பேசியே!!