Saturday 24 September, 2011

கனத்த கடந்தவைகள்!

அகண்ட இருளில் உருண்ட
குத்துப்போனியின் 'நங்' எதிரொலிக்கிறது;
வழக்கமாய் பழக்கப்பட்டவைகள்,
நிறம்மாறி தெரிகிறது;

வீம்பாய் உதிர்த்த சிரிப்புக்கள்,
மேகமாய் கலைகிறது;
சொந்த சொத்துத் துளிகள்,
கன்னத்தை பதம் பார்க்கிறது;

பஞ்சுமணலில் அடித்த குட்டிக்கரணங்களாய்,
மாரில் பட்ட மிதிப்புகள் நினைவலையில் துடிக்கிறது;
எழுந்து அனைத்தையும் தட்டிவிட்டு,
புதைந்திருந்த வலக்காலை பாரத்தோடு எடுத்து வைத்து...

உருவடிவ நிகழெதிர்காலம்!

தெளிவான குரல்; துள்ளிய மனம்,
கடினத்தோடு கழித்த,
சில மருத்துவமனை இரவுகள் தந்த தெம்பு!

உடல் பாரம், நாற்பதை எட்டாத பொழுதும்,
உப்பிய அழுத கன்னங்கள்;
உருண்டை முகம் பிரதிபலிக்கும்,
உருவத்தோடாடிப் போயிருந்த உயிர்!

சிவந்த இளஇதழ்களைக்
காணும், நினைக்கும் பொழுதெல்லாம்,
உவகை கொண்டு தித்திக்கும் மனம்!

சிறுமூக்கு தாங்கிய கண்ணாடிக்குள்,
ஊடுறுவும் இன்னும் சிறுபளீர் விழிகள்;
கூர்ந்து தெறிக்கும் பார்வையழகை,
மெச்சி உச்சிமுகர்ந்து அரவணைக்கும்
பொழுதுகள் தரும் பாச சுகங்கள்!

எதிர்காலத்தில்,
வந்த அந்தத் தெத்துப்பல்லழகைக் காண;
காலம் கைகொடுக்கக்
குருதிக்குள்ளாடி இருதயம் துடித்து
எதிர்பார்ப்பது, நிச்சயம் இயற்கையறியும்!

Friday 16 September, 2011

தாங்குபூமி

மனதுக்கும் உடலுக்கும்,
வயதுக்குச் சண்டை;
நிழலுக்கும் நிஜத்துக்கும்,
வாழ்விற்குச் சண்டை;
பூபாளமே, தென்றலே,
முல்லையே வாரும்!
எங்களைப் பாரும்!

நாடிவந்தும் வாடிப்போகும் குட்டைக்குள்
முங்கு நீச்சலடிக்க முயலும்,
முழங்கால் நாழிமுதல்,

நற்றிணை, நாலடி நவிழ்ந்த பருவம்பல,
முற்றிய மனதோடு முன்னேறி கடந்த
முடி கழித்த சருகுகள் வரை,

உணர்விழந்த தருணங்கள் பலவும்
கழித்ததென்னவோ நிஜமே!
தருணங்களும், சூழலன்றி
காரணிகள் ஒன்றென்பதே, வியப்பு!

இயற்கை மன நிலை! விதைத்த
செயற்கைப் பொழுது கழி நிலை!
கடைவரை இருளிலும் நிழலாய் வேண்டுமென,
வாழ்வியலுக்கு ஆதாரமாக்கக்கொண்டு
நீருக்குள் சுவாசித்திருக்க,
இடைவந்த இம்சிக்கும் இடைச்சொருகுகள்,
நாட்கள் நகர, விருப்பத்தொடு இணைத்த
நிரந்தரக் கொடூரமாகிவிட்டனவே!

பேடிகளாய்க் குனிந்த முதுகுகளைப் பார்த்தே,
பரவசமான அமைதியோடு பூமி மட்டும்!